Monday, January 20, 2014

யார் படிக்க இந்த "ஆவிப்பா" ?

            "எல்லாம் தெரிந்தவர்கள்தான் கவிதைகளும், கதைகளும் எழுத வேண்டும் என்றிருந்தால் தமிழில் இவ்வளவு புத்தகங்கள் வெளிவந்திருக்காது."
                                                                                                    -கோவை ஆவி 

                   இலக்கியமோ,  இலக்கணத்தோடு கூடிய சொற்றோடரோ எதிர்பார்க்கின்ற ஆள் நீங்கள் என்றால்  ஆவிப்பா நிச்சயம் உங்களுக்கான புத்தகம் அல்ல. எளிமையான வார்த்தைகளும், எதார்த்த உணர்வுகளும் மட்டுமே இதில் இருக்கும்.  யாரையும் "பகடி" செய்தோ, மற்றவர்களை காயப் படுத்தும் வார்த்தைகளோ நிச்சயம் இதில் இருக்காது.  

                     ஆகச் சிறந்த "உலக சினிமாக்களின்" நடுவே வந்த "வருத்தப்படாத வாலிபர் சங்கமும்" மக்களால் ரசிக்கப்பட்டு  வெற்றியடைந்த படம்தான். இந்த "ஆவிப்பாவும்" அதுபோன்ற ஒரு படைப்பு தான்.  கண நேரம் கூட சிந்திக்காமல் வெளிவந்த முத்தாக மற்றவர்களுக்கு தெரியலாம்.. ஆயினும் எந்த ஒரு படைப்பையும் ஒரு புத்தகமாக கொண்டு வருவதில் உள்ள சிக்கல்கள் யாவையும் கடந்தே, பல பேருடைய உழைப்பை தாங்கி வெளிவருகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.



                      ஒரு வாசகனாய் இந்த புத்தகத்தை விமர்சனம் செய்ய உங்களுக்கு நிச்சயம் உரிமை இருக்கிறது. ஆனால் வெளிவராத ஒரு புத்தகத்தின் தரத்தை பற்றி விமர்சிப்பது நிச்சயம் வேதனைக்குரியது. இது போன்ற பலவற்றையும் நான் எதிர்பார்த்து தானிருந்தேன் என்ற போதும் என் பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருந்த ஒரு கூர்வாளே கீறுமென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. எது எப்படியோ யார் மீதும் திணிக்கப் படுவதற்கு அல்ல இந்த ஆவிப்பா.. விருப்பமுள்ளவர்கள் வாங்கிப் படியுங்கள். இல்லையென்றால் வழக்கம் போல் கேலி பேசிவிட்டு 'வெளிநாடு' செல்லுங்கள்.. இரண்டும் எனக்கு சந்தோசம் தான்.. குடிக்கறதுக்கு காப்பி வேணும், அது உயர்தர "காபி டே" வோ இல்லே தெருமுனையில் இருக்கும் டீக்கடையோ அது எனக்கு கவலையில்லை.. நட்போடு குடிப்பதில் தான் சந்தோசம் இருக்கிறது..

                     வெளியிடும் தேதி ஒன்றிரண்டு நாட்களில் அறிவிக்கிறேன்.. விருப்பமும், வாழ்த்த மனதும் இருப்பவர்கள் சென்னைக்கு வர முடிந்தால் வாருங்கள். மிகவும் சந்தோஷப் படுவேன்!